U-19 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணியில் கலக்கிய தமிழக வீரர்..!! அதிசய திறமையால் அசத்தல்.
கயானா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முதல் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் யார் அடுத்த சூப்பர் ஸ்டாராக விளங்குவார்கள் என்பதை நாம் நேற்றே பார்த்தோம்.
இந்த நிலையில், U-19 ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நிவேதன் ராதாகிருஷ்ணன், தனது அதிசய திறமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.
கயானாவில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் U-19 மேற்கிந்தியத் தீவுகள் அணியும், U-19 ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற U-19 மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

U-19 ஆஸி. வெற்றி
முதலில் களமிறங்கிய U-19 மேற்கிந்தியத் தீவுகள் அணி 40.வது ஓவரில் 169 ரன்களை மட்டுமே எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணியின் அக்கிம் அகஸ்தே 57 ரன்கள் எடுத்தார். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய U-19 ஆஸ்திரேலிய அணி 44வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தமிழக வீரர்
இந்தப் போட்டியில் U-19 ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் நிவேதன் ராதாகிருஷ்ணன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார். சுழற்பந்துவீச்சாளரான இவருக்கு அதிசய திறமை ஒன்று உள்ளது. அதாவது இவரால் இரண்டு கையிலும் பந்துவீச முடியும். இதனால் நிவேதன் ராதாகிருஷ்ணன் பந்துவீச்சை காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

அசத்தல்
10 ஓவர் வீசிய அவர் 48 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்கிய அவர் 58 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை எடுத்தார். முதல் போட்டியிலேயே தாக்கத்தை ஏற்படுத்திய நிவேதன் ராதாகிருஷ்ணன், எதிர்காலத்தில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்

ஐ.சி.சி. கேட்குமா?
இந்த நிலையில் ஐ.சி.சி.யின் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த நிவேதன் ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு முறையும் வேறு கைகளால் பந்துவீசும் போது நடுவரிடம் தெரிவிக்கும் நடைமுறையை ஐ.சி.சி. மாற்ற வேண்டும். பேட்ஸ்மேன்கள் திடீரென்று SWITCH HIT அடிக்கும் போது நடுவரிடம் என்ன அனுமதியா வாங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications