கோலாலம்பூர் : ஐசிசி அண்டர் 19 மகளிருக்கான டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரிட்சை நடத்தின.
இரு அணிகளும் ஒரு முறை கூட தோல்வியை தழுவாமல் பைனல் வரை வந்திருக்கிறது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென்னாபிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி பைனலுக்கு வந்தது.

மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து உள்ளனர்.
தொடக்க வீராங்கனை ஜெம்மா போத்தா 16 ரன்கள் எடுக்க மற்று வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நடு வரிசையில் மியாக் வான் மட்டும் 23 ரன்கள் எடுக்க, பே கவுலிங் 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 82 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் திரிஷா மூன்று விக்கெட்டுகளையும் வைஷ்ணவி, ஆயுசி சுக்லா மற்றும் வருணிக்கா சிசோடியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டு களையும் கைப்பற்றினர். இதை அடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை காமிலினி 13 பந்துகளை எதிர் கொண்டு எட்டு ரன்களில் வெளியேறினார்.
இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திரிஷா மற்றும் சாணிக்கா ஆகியோர் அபாரமாக விளையாடினர். திரிஷா எட்டு பவுண்டரிகளை விரட்டி 33 பந்துகளில் 44 ரன்கள் சேர்க்க சாணிக்கா 22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்கள் எல்லாம் ஒரு விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.