மும்பை: 2026 டி20 உலககோப்பையில் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய ஐசிசி வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்தியாவுடனான டி20 உலகக் கோப்பை போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவு குறித்து ஐசிசி முதல் முறையாக மவுனத்தை கலைத்துள்ளது. எனினும் பாகிஸ்தானின் இந்த முடிவு முறைப்படி ஐசிசியிடம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து (பிசிபி) அதிகாரப்பூர்வ தகவலுக்காக ஐசிசி காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி "அனைத்து தகுதியுள்ள அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட எதிர்பார்க்கப்படும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுக்கும் நிலை நியாயமில்லாதது" என்று ஐசிசி சுட்டிக்காட்டியது.

"விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டித்தன்மை, மற்றும் நேர்மை அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன" என அமைப்பு வலியுறுத்தியது. பாகிஸ்தான் அரசின் இம்முடிவு உலக கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை அளிப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
"குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும். அரசு முடிவுகளை ஐசிசி மதித்தாலும், இம்முடிவு உலக விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கானவர்கள் உட்பட உலகளாவிய ரசிகர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல," என ஐசிசி தனது அறிக்கையில் சாடியுள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பிசிபி கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்ட வேண்டும் என்று ஐசிசி வரியுறுத்தியுள்ளது. மேலும், "பிசிபி தனது சொந்த நாட்டில் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒரு நடவடிக்கை பாகிஸ்தானையும் சேர்த்து, மற்ற உறுப்பினர் நாடுகளையும் பாதிக்கும் எனவும் ஐசிசி குறிப்பிட்டது.
எனினும்,ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசி-யின் முதன்மை நோக்கம். இது பிசிபி உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட பொறுப்பாகும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பிசிபி ஆராயும் என ஐசிசி எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.