
டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை
ஒருகாலத்தில் வாரக்கணக்காக டிவி முன்பு உடகார்ந்து டெஸ்ட் போட்டிகள் பார்த்த நிலை இருந்திருக்கிறது. கிரிக்கெட்டின் பொன்னான காலம் என்றழைக்கப்பட்ட அந்தச் சமயத்தில் டிரா ஆகும் போட்டியை கூட விழுந்து விழுந்து பார்க்கும் நபர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் டி-டுவென்டி போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் போட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்தியாவில் ஐபிஎல் வந்த பின் டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் கேட்பதுடன் ரசிகர்கள் நிறுத்திக் கொண்டனர்.

வார இறுதியில் முடிவு
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளை மறுபடியும் பிரபலப்படுத்தும் நோக்கில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. பல காலமாக வெறும் கனவாகவே இருந்த இந்தத் திட்டம் தற்போது செயல் வடிவம் பெற இருக்கிறது. அதன்படி இந்த வார இறுதியில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் 2019ல் இருந்து
இந்த வார இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நிறைய கருத்துக்கள் எழுந்துள்ளன. அதன் படி சர்வதேச முதல் டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டிகள் 2019 ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் விளையாடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வருட இடைவெளியில்
மேலும் ஒருநாள் கிரிக்கெட் போல 4 வருடத்துக்கு ஒரு முறை இல்லாமல் 2 வருடத்துக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் உலகின் தலைச்சிறந்த அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது .

புதிய மாற்றங்கள்
அதேபோல் டெஸ்ட் போட்டியில் சில வித்தியாசமான மாற்றங்களும் கொண்டுவரப்பட இருக்கின்றது. சம்யங்களில் டெஸ்ட் போட்டிகள் ஒருநாள் போட்டிகள் போல இரவு பகலாக நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாகவும் குறைக்கலாம் என யோசனை வழங்கப்பட்டுள்ளது .


Click it and Unblock the Notifications