டெல்லி: சிவசேனா மிரட்டலைத் தொடர்ந்து இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 5வது ஒருநாள் போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தாரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திரும்ப அழைத்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான் வர்ணனையாளர்களான வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் ஆகியோரும் சென்னை போட்டியை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி மும்பையில் வரும் 25-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கு ஒரு நடுவர் இந்தயாவைச் சேர்ந்தவரும் மற்றொருவர் ஐ.சி.சி. நடுவராகவும் செயல்படுவார்கள்.
ஐ.சி.சி. நடுவராக பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், பி.சி.சி.ஐ. தலைவர் ஷசாங்க் மனோகரை மும்பையில் சந்தித்து பேச இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா பி.சி.சி.ஐ. தலைமை அலுவலம் சென்று போராட்டம் நடத்தியது. இதனால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அலீம் தாருக்கு எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து 25-ந்தேதி பாகிஸ்தானின் அலீம் தாரை நடுவராக செயல்பட விடமாட்டோம் என்றும் சிவசேனா தொண்டர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் மும்பையில் நடைபெற இருக்கும் போட்டியில் நடுவராக செயல்பட இருந்த அலீம் தாரை ஐ.சி.சி. திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வாசிம் அக்ரம், அக்தர் விலகல்?
இதேபோல் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் வர்ணனையாளர்களாக பணியாற்றிவரும் வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் ஆகிய இருவரும், சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.