இறுதிப்போட்டியில் முதல்முறையாக இந்தியா
இந்திய டி 20 மகளிர் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. முதல் முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இது ஒரு சாதனையாகும். எனவே இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அது வரலாறு ஆகும். இந்திய டி20 அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமை ஹர்மன்ப்ரீத் கவுருக்குக் கிடைக்கும்.
பேட்டிங், பௌலிங்கில் ஆதிக்கம்
இந்திய அணி இந்தத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே அருமையாக ஆடி வருகிறது. காரணம் இந்திய வீராங்கனைகள் சிலர் அட்டகாசமாக ஆடி வருவதுதான். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இந்தியா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. குறிப்பாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
விஸ்வரூபத்தை காட்ட தயார்
பூனம் மற்றும் ராதா யாதவ் அதிரடியாக ஆடி வருகிறார்கள். அதேபோலத்தான் ஷெபாலி வர்மாவும். இந்தத் தொடர் முழுவதும் இந்த மூன்று ஆட்ட ராட்சசிகளின் அட்டகாசம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இதைக் கண்டுதான் ஆஸ்திரேலியாவும் வெலவெலத்துப் போய்க் காணப்படுகிறது. இதுவரை இல்லாத வாய்ப்பு என்பதால் நாளை தங்களது விஸ்வரூபத்தை இந்த மூன்று பேரும் காட்டக் கூடும்.
ஆஸ்திரேலியா சமாளிக்குமா?
அதேபோல இன்னொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ். இந்த டீன் ஏஜ் புயலையும் ஆஸ்திரேலியா சமாளித்தாக வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அரை இறுதியில் இங்கிலாந்துடன் மோதவிருந்தது. ஆனால் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அருமையான பௌலர்கள்
சூப்பர் பேட்டிங் வரிசை, அருமையான பந்து வீச்சாளர்கள், அட்டகாசமான பீல்டிங் செட்டப் ஞானம் என்று ஒரு பக்காவான அணியாக இந்தியா திகழ்கிறது. எனவே நாளைய போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு சிறப்பானதொரு வேட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.