மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச்சுற்று இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் பலபரிட்சை நடத்துகிறது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணி தான் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த இறுதிப் போட்டி நவம்பர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் நடைபெறும். இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது.

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோர் வெற்றிகரமாக சேஸ் செய்ததே கிடையாது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
தற்போது 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்திய மகளிர் அணிக்கு இறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.
இதுவரை 34 முறை இரு அணிகளும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மோதி உள்ளன. இதில் இந்திய மகளிர் அணி 20 முறையும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 13 முறையும் வென்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. சமீபத்தில் இரு அணிகளும் லீக் சுற்றில் மோதியது.
இதில் தென் ஆப்பிரிக்க அணியே வெற்றி பெற்றது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்கு இந்திய மகளிர் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஸ்மிருதி மந்தானா, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை வீழ்த்த முடியும். இந்த போட்டியை ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம்.