மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 17 வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக சோபனா 66 ரன்கள் எடுக்க ரூபியா ஹைதர் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மகளிர் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை அலிசா ஹெலி மற்றும் போபே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் கேப்டன் அலிசா ஹெலி 77 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.
இதில் 20 பவுண்டரிகள் அடங்கும். போபே 72 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க இந்த ஜோடி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி நான்கு வெற்றிகளை பெற்று ஒரு போட்டி ரத்தானதால் ஒன்பது புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 6 புள்ளிகள் மூன்றாம் இடத்திலும், இந்திய அணி 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் நியூசிலாந்து அணி மூன்று புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் வங்கதேச அணி 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், இலங்கை அணி 2 புள்ளிகளுடன்,ஏழாவது இடத்திலும் பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் எட்டாவது இடத்திலும் உள்ளது.இதனிடையே இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தை இந்தூரில் எதிர்கொள்கிறது.இந்த போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.