வெளுத்து வாங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. 171 ரன்கள் குவித்து அசத்தல் சாதனை.. மிரண்டு போன ஆஸ்திரேலியா
டெர்பி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக 171 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2வது அரையிறுதிப் போட்டி டெர்பியில் நேற்று நடந்தது.

இதில் வலுவான இந்தியா அணியும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் என்ற இமால ஸ்கோரை குவித்தது. அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கிவிட்டார். அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு பேட்டிங்கில் ஒரு ஸ்டைல் இருந்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக காட்டிய கவுர் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர் உதவியுடன் இந்த ரன்களை விளாசினார் கவுர். மகளிர் கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.


Click it and Unblock the Notifications