மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன் அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதன் பின் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதை அடுத்து இந்திய அணி வீராங்கனைகள் தங்களது வெற்றியை மைதானத்தில் ஒன்றாக கூடி கொண்டாடினர்.

ஒவ்வொரு வீராங்கனைகளும் ஆனந்த கண்ணீர் விட்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தனர். இதை தொடர்ந்து பேசிய இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தானா, இந்த உலகக் கோப்பை வென்றதை தம்மால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் நாங்கள் விளையாடி பல்வேறு தோல்விகளை சந்தித்து இருக்கிறோம்.
பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது. எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தோம். இது வெறும் வெற்றி மட்டுமல்ல மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கானது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதற்காக நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். கடந்த ஒன்றரை மாதமாக எங்களுக்கு கிடைத்த ஆதரவு பிரம்மிக்கத்தக்கது. தற்போது உலக கோப்பையை நாங்கள் வென்றிருக்கிறோம்.
இந்த ஒரு இரவிற்காக நாங்கள் 45 நாட்கள் தூங்காமல் இருந்திருக்கின்றோம். கடந்த உலகக்கோப்பை எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த தோல்விக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளோடு இருந்தோம். உடல் தகுதியை அதிகரித்து, பலமான வீராங்கனைகளாக மாறுவது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீராங்கனைகளாக இருப்பது என்று முடிவு செய்து உழைத்தோம்.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து விளையாடினோம். ஒவ்வொரு வீராங்கனைகளும் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இருந்தோம். நல்ல நாட்களிலும், சரி மோசமான நாட்களிலும் சரி நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்திருக்கின்றோம். அடுத்தவரின் வெற்றியை நாங்கள் கொண்டாடினோம். இம்முறை எங்கள் அணியின் அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது. அதுதான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என ஸ்மிருதி மந்தானா தெரிவித்துள்ளார்.