மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது. மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா மற்றும் செபாலி வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 104 ரன்கள் அடித்து அசத்தியது.

சிறப்பாக விளையாடிய 45 ரன்கள் ஆட்டம் இழந்தனர். இந்த தொடரில் கடைசி கட்டத்தில் மாற்று வீராங்கனையாக வந்த செபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். அரை இறுதியில் சதம் விளாசிய ஜெமிமா 24 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நடு வரிசையில் தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். இறுதியில் ரிச்சா கோஸ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டியில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதை அடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றவுடன் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி களம் இறங்கியது. மகளிர் உலகக் கோப்பை பைனலில் அதிகபட்சமாகவே 167 ரன்கள் தான் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது.
தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான லாரா மட்டும் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு சவால் அளித்தார். எனினும் மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர். தாஸ்மின் பிரிட்ஸ் 23 ரன்களிலும், சுனே லஸ் 25 ரன்களிலும், மர்ஷியன் காப் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் தனி ஆளாக போராடிய லாரா 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதேபோன்று நடுவரிசையில் டெக்கர்சன் 35 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் லாரா ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்காவின் கனவு கலைந்தது.
அந்த அணி 45.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா ஐந்து விக்கெட்டுகளும் செபாலி வர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.