பிப்.21 முதல் மார்ச் 8 வரை
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வரும் 21ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி மகளிர் தினத்தில் நிறைவடையவுள்ளது. இதில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் மகளிர் அணியினர் மோதவுள்ளனர்.
இளம் வீராங்கனைகள் சேர்ப்பு
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 16 வீராங்கனைகளை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் வழிநடத்த உள்ளார். இதேபோல அணியில் 16 வயதான ரிச்சா கோஷ் மற்றும் ஷபாலி வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். நுசாத் பர்வீனும் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல ஸ்மிரிதி வந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
குரூப் பியில் பாகிஸ்தான் அணி
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்திய கேப்டன் கருத்து
இந்த டி20 உலக கோப்பை தொடர் பெண்கள் கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் பௌலர்கள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், பேட்டிங்கில் துவக்க வீராங்கனைகள் சிறப்பாக உள்ள நிலையில், மிடில் ஆர்டரில் ஆடும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு எந்த சூழ்நிலையிலும் அணிக்கு கைக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹர்மன்பிரீத் நம்பிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் சிறப்பாக விளங்கியதாகவும், டி20 போட்டிகளில் தடுமாறி வந்ததாகவும் ஆனால் தற்போது டி20 போட்டிகளிலும் சிறப்பாக இந்திய மகளிர் விளையாடி வருவதாகவும், தடுமாற்றமின்றி ஆஸ்திரேலியாவில் விளையாடிவரும் டி20 தொடரை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் சாதகமாகும்
கடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களில்கூட 100 சதவிகித திறமையை முன்வைத்ததாகவும், அதற்கேற்ற பலன்களை திரும்ப பெற்றதாகவும் தெரிவித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர், 100 சதவிகித திறமையை நாம் வெளிக்காட்டினால், முடிவுகள் சிறப்பாக வெளிவருவதை தடுக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை தெரிவிக்கும் கவுர்
ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு தொடரில் சிறப்பாக விளையாடிவரும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர், இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் பலம் ஸ்பின்னர்கள்தான் என்று பெருமை தெரிவித்துள்ள கவுர், அதை டி20 உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக பயன்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலக கோப்பை தொடரை எதிர்கொள்ள இந்திய மகளிர் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல் போட்டியில் இந்தியா
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வரும் 21ம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலியா 4 முறை வென்றுள்ளது. இந்நிலையில் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 8ம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.