கொழும்பு: 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடர் மழையால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) கடுமையாகச் சாடியுள்ளார். ஒரு வெற்றி கூட பெறாமல் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய விரக்தியில், எதிர்காலத் தொடர்களிலாவது சிறந்த திட்டமிடல் வேண்டும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் 25வது லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஆனால், போட்டி தொடங்கிய 4.2 ஓவர்களிலேயே கனமழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. கொழும்பில் மட்டும் இந்தத் தொடரில் மழையால் கைவிடப்படும் ஐந்தாவது போட்டி இதுவாகும்.

இதில் பாகிஸ்தான் மட்டுமே மூன்று போட்டிகளை மழையால் கைவிடப்பட்டு முழுமையாக இழந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி பாதியில் நின்றதால் டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா வென்றது. பாகிஸ்தான் அணி மட்டுமே இந்த உலகக்கோப்பையில் தனது போட்டிகளை இலங்கையில் ஆடுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி மட்டுமே இலங்கையில் தங்களின் போட்டிகளை ஆடுகிறது.
பாகிஸ்தான் அணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் தங்கள் கிரிக்கெட் போட்டிகளை ஆடாது என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவே இந்த நிலைக்கு காரணம். ஆக, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தான் இலங்கையில் தங்கள் போட்டிகளை ஆட ஒப்புக் கொண்டது. அப்படி இருக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீது தனது கோபத்தை காட்டி இருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா.
இந்தப் போட்டியும் கைவிடப்பட்டதால், பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் பாத்திமா சனா, தனது விரக்தியை வெளிப்படையாகக் கொட்டினார்.
"எங்களுக்குச் சாதகமாக அமையாத ஒரே விஷயம் வானிலைதான் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு ஐசிசி மூன்று நல்ல மைதானங்களையாவது ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நாங்கள் நான்கு வருடங்கள் காத்திருக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
தொடரில் அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், "பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் நாங்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால், பேட்டிங் துறையில் நாங்கள் பின்தங்கிவிட்டோம். சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களால் வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை" என்றார்.
அணியின் இளம் கேப்டனாகத் தனது முதல் உலகக் கோப்பை அனுபவம் குறித்து 22 வயதான பாத்திமா பேசுகையில், "அணியின் இளம் கேப்டனாக, இந்த உலகக் கோப்பையில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். சமீப காலமாக நாங்கள் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. நாங்கள் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரவுள்ளது. அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
கேப்டன் பதவி அளிக்கும் அழுத்தம் குறித்துப் பேசுகையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை உதாரணமாகக் குறிப்பிட்டார். "அழுத்தம் எப்போதும் இருந்தது. ஆனால் நான் எப்போதும் கேன் வில்லியம்சனைப் பார்ப்பேன். அவர் உலகக் கோப்பையை மிக அருகில் இழந்தும்கூட, முகத்தில் புன்னகையைத் தக்க வைத்துக் கொண்டார். நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். தோல்வியடையும் அணியின் கேப்டனாக இருக்கும்போது, உங்கள் அணியின் மீது உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். வரவிருக்கும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என நம்புகிறேன்" என்றார்.
மறுபுறம், இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பட்டு, தொடர்ச்சியாக மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டாலும், எதிர்காலத்தை நேர்மறையாக நோக்குவதாகத் தெரிவித்தார். "என்னால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களை நான் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். ஆனால், எதிர்காலத்தில் நாங்கள் என்ன சிறப்பாகச் செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.
கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், மகளிர் உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகள் இனி இந்தியாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.