மும்பை: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்து இருக்கிறது. இதற்கு பின்னால் முக்கிய காரணமாக இருப்பவர் பயிற்சியாளர் அமோல் முசும்தார். ஒரு வீரராக இந்திய அணிக்குள் இடம் பெற முடியாத நிலையில் இருந்த அமோல் முசும்தார், தற்போது பயிற்சியாளராக உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், எங்கள் அணியை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலக கோப்பையில் வென்றதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எங்கள் அணி வீராங்கனைகள் நம்ப முடியாத ஒரு சாதனையை செய்திருக்கிறார்கள்.

இதற்கு ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தான் பாராட்டுக்கள் சேர வேண்டும். இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு அனைத்து தகுதிகளும் எங்கள் அணி வீராங்கனைகளுக்கு இருக்கின்றது. இதற்காக அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியர்களும் பெருமை பெறும் விதமாக எங்கள் அணி உலக கோப்பையில் வென்றுள்ளது.
நாங்கள் தொடரில் நடுவில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவினோம். ஆனால் அதைப் பற்றி நாங்கள் பெரியதாக கவலை கொள்ளவில்லை. வெற்றி அருகே சென்று எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றுதான் நாங்கள் அந்த போட்டிகளை பார்த்தோம். அதில் நாங்கள் என்ன தவறு செய்தோம். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து முடிவு செய்தோம்.
இந்த உலகக் கோப்பை வெற்றி இன்னும் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு என்ன செய்யப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு விஷயமும் கிடைக்க தகுதியானவர்கள். இதற்காக அவர்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கின்றேன்.
செபாலி மேஜிக் செய்து விட்டார். அரை இறுதியில் வந்து கொஞ்சம் கூட அழுத்தமும் இல்லாமல் சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றார். ஒரு அணியாக நாங்கள் உடல் தகுதியை தீவிரமாக முன்னேற்ற முயற்சி செய்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பில்டிங் மற்றும் உடல் தகுதியில் தான் கவனம் செலுத்தினோம். அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்று அமோல் முசும்தார் கூறியுள்ளார்.