துபாய் : மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் தோல்வியை தழுவியதால், தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. அரை இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்திய மகளிர் அணி இனி எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய சூழலில் இருந்தது.
இந்த தருணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் ரன் ரேட்டில் பெரிய அளவு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இலங்கை அணி எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 90 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 82 ரன்கள் என மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தற்போது பாசிட்டிவ் ரன் ரேட்டை அடைந்திருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
குரூப் ஏ வில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் மற்றும் 2.528 ரன்ரேட் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் 0.576 ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் விளையாடி இரண்டு புள்ளிகள் உடன் 0.555 என்ற ரன் ரேட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றியுடன் மைனஸ் 0.05 என்ற ரன் ரேட்டில் இருக்கிறது. இலங்கை அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், டாப் இரண்டு இடத்தை பிடிக்கும் அணியால்தான் முடியும். இந்த சூழலில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதி இருக்கிறது.
இதில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதுபோன்று குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் வங்கதேச அணி 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும்,ஸ்காட்லாந்து புள்ளிகள் ஏதும் இன்றி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.