மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது.
339 ரன்கள் என்று இலக்கை இந்திய அணி எப்படி எட்டப் போகிறது என கலக்கத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இந்திய வீராங்கனை ஜெமிமா 127 ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் மிகவும் பெருமையாக உணர்கின்றேன்.

என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. ஆஸ்திரேலியா என்ற ஒரு மிகப்பெரிய அணியை வீழ்த்தி இருக்கின்றோம். இந்த கட்டத்தை தாண்ட பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம். இந்த வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். என் அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நல்ல நம்பிக்கையுடன் இருந்தோம்.
எந்த போட்டியாக இருந்தாலும் எந்த சூழலாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. நாங்கள் சில தவறுகளை இந்த தொடரில் செய்தோம். அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். ஆனால் இன்று அனைத்துமே எங்களுக்கு தகுந்த மாதிரி சென்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக வெளிப்படுத்தவில்லை.
அந்தப் போட்டியில் நாங்கள் தாமதமாக அதிரடியை காட்டினோம். சில ரிஸ்களை முன்பு எடுத்திருக்க வேண்டும். அதனால் தான் அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம். அந்த தோல்வியிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை நாங்கள் விவாதித்தோம். இந்த போட்டியில் எப்படி அதிரடி காட்டுவது? எவ்வாறு கணக்கிட்டு விளையாடுவது என்பது குறித்து யோசித்தோம்.
வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும்போது கம்பேக் கொடுப்பது மிகவும் கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இது 50 ஓவர் போட்டி என்பதால் கடைசி ஐந்து ஓவராக இருந்தாலும், கணக்கிட்டு விளையாட வேண்டும் என்பதில் முடிவாக இருந்தோம். இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே நாங்கள் பேசி வைத்திருந்ததால் எங்களுக்கு எந்த ஒரு பதற்றமும் இல்லை.
50 ஓவர் முழுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். நானும் ஜெமிமாவும் பேட்டிங் செய்யும்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தோம். அணிக்காக எப்போதுமே வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் ஜெமிமா தெளிவாக இருந்தார். இந்த வெற்றிக்கு அவருக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். நெருக்கடியான சூழலை சரியாக அவர் விளையாட்டினார்.
இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு சென்றிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அடுத்த போட்டி மிகவும் முக்கியமானது. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் எதற்காக நாங்கள் முழு கவனத்துடன் இருப்போம். சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுவது என்பது மிகவும் ஸ்பெஷல் ஆனது. நிச்சயமாக இறுதிப்போட்டியிலும் எங்களுடைய பெஸ்ட் கொடுப்போம்.
நாங்கள் தனியாக இல்லை ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் சில போட்டிகளில் தோற்ற போது கூட எங்களுக்கு ஆதரவாக ரசிகர்கள் இருந்தார்கள். ஒட்டு மொத்த நாடும் எங்கள் பின்னால் நிற்கிறது என்று ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார்.