கவுஹாத்தி: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றிருக்கிறது. உலகக்கோப்பை 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் தொடர் செவ்வாய் அன்று கௌஹாத்தியில் தொடங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய மகளிர் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மூன்றாவது வீராங்கனையாக களமிறங்கிய ஹர்லின் தியோல் அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதேபோன்று கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 21 ரன்களில் வெளியேற ஜெமிமா கோல்டன் டக் ஆனார். நடு வரிசையில் விளையாடிய தீப்தி சர்மா பொறுப்பாக ஆடி 53 ரன்கள் சேர்க்க இறுதியில் அமஞ்சோத் கவுர் 56 பந்துகளில் 57 ரன்களும் சினே ரானா 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தனர். இதனால் 47 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.
இந்தியா விளையாடிய போது ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டியின் ஓவர் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து 47 ஓவரில் 271 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இலங்கை அணியின் ஹசினி பெரேரா 14 ரன்களிலும், கேப்டன் சமாரி அத்தப்பட்டு 43 ரன்களும் ஹர்ஷிதா 29 ரன்களும் எடுத்தனர். எனினும் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆட வில்லை.
நடு வரிசையில் நிலாக்க்ஷிகா சில்வா மட்டும் 35 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் திரும்பினார். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் விளையாடினாலும் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் பார்ட்னர்ஷிப் சேர்க்க முடியாததால் இலங்கை மகளிர் அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் 45.4 ஓவர்களில் 211 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.