விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வரும் இந்திய அணி இம்முறை பேட்டிங்கில் ரன் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை இந்திய வீராங்கனைகள் வீணடிக்க வில்லை. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் மற்றும் ஸ்ருதி மந்தானா ஆகியோர் அபாரமாக விளையாடினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் குவித்தது. இந்த தொடர் முழுவதும் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தடுமாறிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர்கள் பட்டையை கிளப்பினர். பிரதிகா ராவல் 96 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 66 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை மற்றும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீராங்கனை போன்ற பல்வேறு சாதனைகளை ஸ்மிருதி மந்தானா படைத்தார்.
மூன்றாவது வீராங்கனை ஆக களமிறங்கிய ஹார்லின் டியோல் 38 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 22 ரன்களும், ஜெமிமா ரொட்ரிக்யூஸ் 33 ரன்களும், ரிச்சா கவுஸ் 32 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் எடுத்தது கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது கொஞ்சம் மைனஸ் ஆக பார்க்கப்பட்டது. இல்லையென்றால் இந்திய மகளிர் அணி 350 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும்.