கவுஹாத்தி: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. கௌஹாத்திகள் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் பல நாட்களாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வில்லை என்றாலும் தங்களது அணி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி பயிற்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடருக்காக பல பயிற்சி முகாம் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக வீராங்கனைகள் நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பந்து வீச்சுக்கும் சில சமயம் ஒத்துழைக்கும் என கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஏழு பேட்டர்ஸ் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் கவுர், தாம் முதலில் டாஸ் வென்று இருந்தால், பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என்று கூறியுள்ளார். எனினும் தங்களது அணி வீராங்கனைகளுக்கு பேட்டிங் செய்ய தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நல்ல ஒரு ஸ்கோரை தாங்கள் எட்டுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அணியில் இருக்கும் அனைத்து வீராங்கனைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார். சொந்த மண்ணில் உலக கோப்பையில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனால் எங்களுடைய முழு கவனம் நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதில் மட்டும் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தங்களது திறமையை வெளிப்படுத்த தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், ஹர்மன்பிரீத் கூறியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக சூழல் நிலவுகிறது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் பெரிய ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.