மும்பை: ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் சுற்று தற்போது முடிவடைந்து இருக்கிறது. கடைசியாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 27 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.
இதை அடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி 27 ஓவராக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கு 126 ரன்கள் என மாற்றி அமைக்கப்பட்டது. 8.4 ஓவரில் இந்திய அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி தொடர முடியாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரை இறுதி சுற்று போட்டிகள் வரும் புதன்கிழமை அக்டோபர் 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடுகின்றன.
இதை அடுத்து வியாழக்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா இருக்கின்றார். 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 365 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரதிகா ராவல் இருக்கின்றார். இவர் 6 இன்னிங்ஸில் 308 ரன்கள் அடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா இருக்கின்றார். அவர் 7 இன்னிங்ஸில் 301 ரன்கள் அடித்துள்ளார் அதிக விக்கெட் எடுத்துள்ள வீராங்கனை பட்டியல் முதல் இடத்தில் அனா சதர்லேண்ட் இருக்கின்றார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆன இவர் மொத்தம் 15 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங் இருக்கின்றார். இவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.