மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் விருந்து படைத்த இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை யார்? அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை யார் என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 9 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 571 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த தொடரில் அவர் இரண்டு சதம், மூன்று அரை சதம் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா இருக்கின்றார். இவர் ஒன்பது போட்டியில் விளையாடி 434 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.
மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லிக் கார்ட்னர் இருக்கிறார். இவர் 7 போட்டிகளில் விளையாடி 328 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடங்கும். நான்காவது இடத்தில் இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் இருக்கின்றார். இவர் 7 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும்.
ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை லிச்சிஃபீல்டு இருக்கின்றார். இவர் 7 போட்டியில் விளையாடி 304 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும். இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஜெமிமா ஏழாம் இடத்தில் 292 ரன்கள் உடன் இருக்கின்றார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 11-வது இடத்தில் 260 ரன்களுடன் உள்ளார்.
இதேபோன்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் ஒன்பது போட்டியில் விளையாடி மொத்தமாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சதர்லாந்து இருக்கின்றார். இவர் 7 போட்டியில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை எசெலிஸ்டோன் 16 விக்கெட் உடனும் நான்காவது இடத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி 14 விக்கெட்களுடன் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆலனா கிங் 13 விக்கெட் உடன் உள்ளார். இதேபோன்று தென்னாப்பிரிக்க வீராங்கனை மிலாபா 13 விக்கெட் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று இந்த தொடரின் சிறந்த வீராங்கனை என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றிருக்கிறார். பேட்டிங்கில் 215 ரன்களும், பந்து வீச்சில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில் அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.