மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு மைல்கல் முடிவை எடுத்து, ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளது. 2025 மகளிர் உலகக் கோப்பையை ஊக்குவிக்கும் விதமாக, மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 4 அன்று டிக்கெட் முன்பதவு தொடங்கிய நிலையில், தற்போது ஒரு டிக்கெட்டுகள் விலையை 100 ரூபாயாக குறைத்துள்ளது.
இது 1.14 அமெரிக்க டாலர் என்ற மிகக் குறைந்த விலை ஆகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 13வது ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இது செப்டம்பர் 30 அன்று கவுகாத்தியில் தொடங்குகிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பை இந்தியாவிற்கு திரும்புகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட எட்டு அணிகள், கொழும்பு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நவி மும்பை ஆகிய ஐந்து இடங்களில் மோதுகின்றன.
2022 ஆம் ஆண்டு நடந்த முந்தைய மகளிர் உலககோப்பையின் டிக்கெட்டுகள் குழந்தைகளுக்கு 350 ரூபாய் மற்றும் பெரியவர்களுக்கு 850 ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது அடிப்படை டிக்கெட் விலை 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை முந்தையதை விட எட்டு மடங்கு மலிவாக்குகிறது.
அண்மையில், மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மாற்றத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு 28 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. மேலும், 500 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் விற்கப்படும் டிக்கெட்களுக்கு முற்றிலும் ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தான் தற்போது, ஐசிசி மகளிர் உலககோப்பைக்கான டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. தற்போது டிக்கெட்டின் 2ஆம் கட்ட விற்பனை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை Tickets.cricketworldcup.com என்ற இணையத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த தொடரின் முதல் போட்டியிலேயே போட்டியை நடத்தும் இந்தியாவும், இலங்கையும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி கவுகாத்தியில் மோதுகின்றன.