மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மாபெரும் வரலாற்று சரித்திரத்தை எழுதி இருக்கிறார்.
எனினும் ஹர்மன்பிரித் கவுர் இந்த சாதனையை படைத்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. 36 வயதான ஹர்மன்பிரித் கவுர் பதவி விலக வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஹர்மன் முன்பே பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். பேட்டிங், பில்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் சில சமயத்தில் அவர் தடுமாறுகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகினால், அவர் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக விளையாடுவார். அவருக்கான பணிச்சுமை குறையும் என்று நான் நினைக்கின்றேன்.
உலகக் கோப்பை போன்ற தொடரில் வென்ற பிறகு இது போல் ஒரு முடிவு எடுக்கப்படாது. ஆனால் இந்திய மகளிர் கிரிக்கெட் மற்றும் ஹர்மன்பிரீத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். கேப்டன் பதவி இல்லாமல் அவர் நிச்சயம் அணியில் வெற்றிக்கு சிறப்பாக பங்களிப்பார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.
இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் கூட அவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடலாம். ஆனால் கேப்டனாக இருந்தால் அது நிச்சயம் முடியாது.ஹர்மன்பிரீத்க்கு பதில் ஸ்மிருதி மந்தானா இந்திய மகளிர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். அடுத்த உலகக்கோப்பை தொடருக்கான அணியை இப்பொழுது இருந்து நாம் தயார் செய்ய வேண்டும்.
நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவும் பந்துவீச்சு நன்றாகவும் இருக்கும். தற்போது பேட்டிங் நல்ல பலமான அணியாக மாறி இருக்கிறது.எனினும் பந்துவீச்சும், பில்டிங்கும் கொஞ்சம் முன்னேற வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சு சரியாக இல்லை. அதனால் தான் அவர்கள் தோல்வியை தழுவினார்கள். இதேபோன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஆணிகளுக்கு நல்ல பவுலிங் படை இருக்கின்றது.
நாம் வெற்றி பெற்றதற்கு நமது பேட்டிங் தான் காரணம் என்று நான் நினைக்கின்றேன். இந்த உலகக் கோப்பை நிச்சயம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் பலர் மகளிர் கிரிக்கெட் நோக்கி வருவார்கள். இந்த உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த தலைமை தேர்வு குழு உறுப்பினர் நீத்து டேவிட்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என சாந்தா ரங்கசுவாமி தெரிவித்துள்ளார்.