மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற ஆசிய அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு பின் உலக கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா ஓவர் வாய் பேசினார். அதில் எப்படி 2023 உலகக் கோப்பை பைனலுக்கு முன் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதி ஆக்குவோம் என்று கூறினாரோ, அதை லாராவும் பேசியிருந்தார்.

ஏதோ இது ஒரு மேஜிக் வார்த்தை போலவும், இதை பேசினால் வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் அவர் பேசினார் என தெரியவில்லை. ஆனால் இன்று அதுவே அவருக்கு ஆப்பாக மாறியது. இந்திய அணி அபார வெற்றியைப் பெற்ற பின் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் அழுது தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக லாரா கடைசி கட்டத்தில் தான் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். இந்தியா வெற்றி பெற்ற பின் அவர் தனது முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். மற்ற தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளும் அழுகையை அடக்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டனர். அப்போது அணியின் பயிற்சி குழுவினர் வீராங்கனைகளை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என சொல்லிவிட்டு கடைசியில் முகத்தைக் கூட காட்ட முடியாத அளவுக்கு தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளுக்கு ஆகிவிட்டது என்று ரசிகர்கள் இதை குறிப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.