கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கொழும்புவில் நடைபெற்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 11க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் 12வது முறையாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீராங்கனை பிராத்திகா ராவால் 31 ரன்கள் எடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 48 ரன்கள் சேர்த்தது. ஹர்லின் டியோல் 46 ரன்களும் கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 19 ரன்களும் எடுத்து திரும்பினர்.இதை அடுத்து நடு வரிசையில் விளையாடிய ஜெமிமா ரோட்டரிகியூஸ் 37 பந்துகளை எதிர் கொண்டு ஐந்து பௌண்டரிகள் சேர்த்து 32 ரன்கள் எடுத்தார். இதை போன்று தீப்தி ஷர்மா 33 பந்துகளை எதிர் கொண்டு 25 ரன்கள் எடுக்க சினே ரனா 33 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
நடுவரிசையில் எந்த வீராங்கனைகளும் பெரிய ஸ்கோர் அடிக்காதது ஒரு மைனசாக பார்க்கப்படுகிறது.இதுபோன்று ரிச்சா கவுஸ் மட்டும் தனியாளாக நின்று அதிரடி காட்டி மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் என 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நிற்க மற்ற வீராங்கனைகள் ஸ்ரீ சரணி கிரந்தி மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 247 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சதியா இக்பால் இரண்டு விக்கெட்டுகளையும், பாத்திமா சானா இரண்டு விக்கெட்டுகளையும் டயானா பாக் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த போட்டியின் போது ஈசல் தொல்லை அதிகமாக இருந்ததால் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக சிரமப்பட்டனர். இதனால் போட்டி நிறுத்தப்பட்டு பூச்சி மருந்து அடிக்கப்பட்ட பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.