கொழும்பு: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் ஒரு ஆட்டம் மழையால் ரத்தாகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொழும்புவில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை முனிபா அலி 22 ரன்களிலும் அலியார் ரியாஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 25 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி மீண்டும் தொடங்க முடியாததால் போட்டி வெற்றி தோல்வி இன்றி ரத்தானது. இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. தற்போது இந்திய அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட முடியும்.
ஒரு வேலை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், அரையிறுதி சற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்று விடும். இதேபோன்று நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
இந்த இரண்டில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும், இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அரை இறுதிக்கு சென்று விடும். ஏனென்றால் இரு அணிகளின் புள்ளிகளும் 6ஆக இருக்கும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா தகுதி பெற்று விடும். இதன் மூலம் நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் நான்காவது இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து அணிக்கு மட்டும் போட்டியிருக்கும்.