உலகக் கோப்பை கிரிக்கெட்: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களையே எடுத்தது.
உலக கோப்பை போட்டிகளின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேசில்வுட் மற்றும் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக சேவியர் டொஹர்ட்டியும், வாட்சனும் அணியில் இடம்பெற்றனர்.

அதே போல் இலங்கை தரப்பிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த கருணாரத்னே மற்றும் ஹெராத், லக்மல் ஆகியோருக்கு பதிலாக சிக்குக பிரசன்னா, உபுல் தரங்கா மற்றும் சசித்ர சேனநாயகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக ஃபிஞ்ச்சும் வார்னரும் களமிறங்கினர். ஃபிஞ்ச் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இருப்பினும் தொடக்கம் முதலே இலங்கையின் பந்துகளை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் துவம்சம் செய்தனர். ஸ்மித் 88 பந்துகளில் 72, கிளார்க் 68 பந்துகளில் 68 ரன்கள் என அசத்தினர்.
இதில் உச்சமாக மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேக 2வது சதமடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் மேக்ஸ்வெல். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் அடக்கம்.
இதேபோல் வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்களை எடுத்தா. ஹடின் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 25 ரன்களைக் குவித்தார். அதுவும் இதில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என ருத்ரதாண்டவமாடினார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.
இந்த அணியை வெல்ல இலங்கைக்கு இலக்காக 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கையின் மலிங்கா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலடி கொடுக்க களத்துக்கு வந்த இலங்கை அணி 2வது ஓவரில் 5 ரன்கல் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் அதன் பின்னர் தில்ஷனுடன் கை கோர்த்த சங்ககாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதுவும் தில்ஷன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை வீசினார். 60 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சங்ககாரா 107 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களைக் குவித்தார். இந்த போட்டி மூலம் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த 12வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் சங்ககாரா.
பின்னர் வந்த இலங்கை வீரர்களும் முடிந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வதில் தீவிரம்காட்டினர். ஜெயவர்த்தனே 22 பந்துகளில் 19 ரன்கள், சந்திமால் 24 பந்துகளில் 52 ரன்கள் என அசத்தினார்.
42.2வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. ஆனால் பின்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 46.2 ஓவர்களில் 312 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications