மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று அடிலைடு நகரில் நடைபெற்றது. உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இணையாக ரசிகர்களால் கருதப்பட்ட இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையையொட்டி ஆஸ்திரேலியாவில் பல கிரிக்கெட் கிளப்கள், ரசிகர்களுக்கு தொலைக்காட்சியில் போட்டியை ஒளிபரப்புகின்றன. நூற்றுக்கணக்கானோருடன் இணைந்து கிரிக்கெட் பார்ப்பதால் இந்த கிளப்களில் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதுகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மேரிலேண்ட்ஸ் ஆர்எஸ்எல் கிளப்பில் சுமார் 180 பேர் கண்டுகளித்தனர். அப்போது வெற்றி தோல்வி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், இரண்டு குழுவினரும் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களை வைத்து மற்றவர்களை தாக்கினர். இதனால் அப்பகுதியே கலவர பகுதியாக மாறியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் படுகாயமடைந்த 3 பேரை வெஸ்ட்மெட் மருத்துவமனையிலும் லேசான காயமடைந்த ஒருவரை ஆபர்ன் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.