அடிலைட்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் குரூப் போட்டிகள் முடிவடைந்து விட்டன. அடுத்து 8 வலிமையான அணிகள் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைகின்றன. இதில் வெல்லும் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிகள் தொடரை விட்டு வெளியேறும்.
இங்கு வெற்றி மட்டுமே செல்லும். தோற்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 42 சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ரன் குவிப்புகள், சாதனைகள் படைப்பு, சாதனைகள் தகர்ப்பு என கலக்கின அணிகள்.

இப்போது 8 அணிகள் கடைசியாக காலிறுதி சுற்றுக்கு வந்துள்ளன. இதில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும், நான்கு அணிகள் வீடு திரும்பும்.
மார்ச் 18ம் தேதி சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறும். ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும், நியூசிலாந்தில் ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை மட்டுமே தோல்வியையே சந்திக்காமல் காலிறுதிக்கு வந்துள்ளன.
காலிறுதிப் போட்டிகளில் மோதவுள்ள அணிகள், போட்டி நடைபெறும் தினம் குறித்த விவரம் (நேரங்கள் இந்திய நேரப்படி):
மார்ச் 18 - காலை 9 மணி - தென் ஆப்பிரிக்கா - இலங்கை.
மார்ச் 19 - காலை 9 மணி - இந்தியா - வங்கதேசம்
மார்ச் 20 - காலை 9 மணி - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
மார்ச் 21 - காலை 6.30 மணி - நியூசிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள்