சிட்னி: உலக கோப்பையின், 2வது அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ள நிலையில், 24ம்தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்காவுடன், மோதப்போகிறது நியூசிலாந்து.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதியில், வங்கதேசத்தை இந்தியாவும், பாகிஸ்தானை, ஆஸ்திரேலியாவும் தோற்கடித்துள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வரும் 26ம்தேதி வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. அன்று, இந்திய நேரப்படி, காலை 9 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

முதலாவது செமி பைனல் வரும் 24ம்தேதி செவ்வாய்க்கிழமை, நியூசிலாந்தின், ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அன்று காலை 6.30 மணிக்கு அப்போட்டி தொடங்க உள்ளது. காலிறுதி போட்டியில், இலங்கையை வீழ்த்திய, தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே முதலாவது செமி பைனல் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதப்போகும் அணி எது என்பதை முடிவு செய்ய, இன்று 4வது மற்றும் கடைசி காலிறுதி போட்டி, வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து நடுவே நடைபெற்றது.
143 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்து வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே, 24ம்தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது.
பச்சை சட்டை, தென் ஆப்பிரிக்காவும், கறுப்பு சட்டை யூனிபார்ம் கொண்ட நியூசிலாந்தும் மோத உள்ளதை போலவே, ப்ளூ யூனிபார்ம் கொண்ட இந்தியாவும், மஞ்சள் சீருடை அணிந்த ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. பைனலுக்கு எந்தெந்த சட்டைகள் வரும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.