செம
ஆனால் கடந்த ஒரு வருடம் என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர்தான். ஆஸ்திரேலியா அணி முதல் அடி வாங்கியது தென்னாப்பிரிக்கா தொடரில்தான். அப்போதுதான் வார்னரும், ஸ்மித்தும் உப்புத்தாள் சர்ச்சையில் சிக்கி அணியை விட்டு நீக்கப்பட்டார்கள். அணிக்கு சேவாக் போல வலுவான தொடக்கமாக இருந்த வார்னர் சென்றதும், கோலி போல ஒன் டவுன் ஆடிய ஸ்மித் சென்றதும் அந்த அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது.
என்ன நடந்தது
அதற்கு அடுத்த அதிர்ச்சி இந்தியா ஆஸ்திரேலியா தொடரில். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை செய்தது. இதை ஆஸ்திரேலியா வீரர்களும் ரசிகர்களும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரும் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். பவுலிங் அட்டாக்கும் அவர்கள் நினைத்தது போல இல்லை.
ஆனால் மாறியது
ஆனால் அதற்கு பின்புதான் ஆஸ்திரேலியா அணியில் நிறைய மாற்றங்கள் வந்தது. ஆரோன் பின்ச் அணியை மொத்தமாக தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். உஸ்மான் குவாஜாவும், ஸ்டோனிசும் பொறுப்பை உணர்ந்து ஆட தொடங்கினார்கள். மேக்ஸ்வெல் தேவையான நேரங்களில் உதவினார். அதோடு ஸ்டார்க் என்று பொன் முத்தும் முழு பார்மிற்கு திரும்பினார்.
செம பாஸ்
யாருமே எதிர்பார்க்காமல் அணிக்குள் ஸாம்பா என்ற கோலியை கூட எளிதாக வீழ்த்த கூடிய ஸ்பின் பவுலர் வந்தார். இப்படியாக ஸ்மித், வார்னர் இல்லாமலே அந்த அணி முழுமையான அணியாக மாறியது. அதன்பின் வரிசையாக வெற்றிப்பாதைக்கு அந்த அணி திரும்பியது. முக்கியமாக இந்தியாவில் வந்து இந்தியா தொடரை வென்று வெற்றியோடு திரும்பியது.
வந்தனர்
அதன்பின் மீண்டும் அணிக்குள் வந்த வார்னர், ஸ்மித் இருவரும் முழு உடல் தகுதியோடு இருப்பதை நிரூபித்தனர். முக்கியமாக வார்னர் ஐபிஎல் தொடரில் இருந்தே தனது கோபத்தை வெளியே காட்டி வருகிறார். அவர் தன்னுடைய வாழ்நாள் பார்மில் இருக்கிறார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு கோபத்தோடு ஆடி வருகிறார். ஸ்மித்தும் நிதானமாக மீண்டு வருகிறார்.
இப்போது
இதோ இப்போது உலகக் கோப்பை தொடரில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியா இவ்வளவு மோசமான அமில சோதனைக்கு சென்றதெல்லாம் இப்படி முதல் ஆளாக செமி பைனலுக்கு தேர்வாகத்தானோ என்னவோ. 2003 ல் பார்த்த அதே ஆஸ்திரேலியா போல வலுவான அணியாக மீண்டும் வந்துள்ளது ஆரோன் பின்ச் அணி.. உலகக் கோப்பையை மீண்டும் கையில் எடுக்காமல் இவர்கள் உறங்க மாட்டார்கள்!