என்ன சர்ச்சை
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் மோதிய கடைசி போட்டியில்தான் இந்த சர்ச்சை நிகழ்ந்தது. அதில், மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 288 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது. அப்போது கெயில் மற்றும் லெவிஸ் ஓப்பனிங் இறங்கினார்கள். கெயில் அதிரடியாக ஆடி வந்தார்.
கிறிஸ் செய்த தவறு
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது ஓவரை மிட்சல் ஸ்டார்க் போட்டார். அந்த ஓவரில் கெயிலுக்கு கேட்ச் விக்கெட் கொடுக்கப்பட்டது. அம்பயர் கிறிஸ் கஃபனே மூலம் விக்கெட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கெயில் உடனே ரிவ்யூ கேட்டார். அது விக்கெட் இல்லை என்று டிஆர்எஸ் ரிவ்யூ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பந்து கெயிலின் பேட்டில் படவே இல்லை.
தவறு மேல் தவறு
கெயிலுக்கு அதே ஸ்டார்க் ஓவரில் எல்பிடபிள்யூ விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு கெயில் ரிவ்யூ கேட்டார். இந்த விக்கெட்டும் தவறானது என்று ரிவ்யூ மூலம் தெரிய வந்தது. கிறிஸ் கஃபனே இரண்டு முறை இப்படி தொடர்ந்து தவறு செய்தார். அதோடு நிற்கவில்லை. 5 வது ஓவர் போட்ட ஸ்டார்க் பந்தில் கெயில் எல்பிடபிள்யூ மூலம் அவுட்டானார். இந்த விக்கெட் கொடுத்ததும் கிறிஸ் கஃபனேதான்.
கிறிஸ் கஃபனே ஏன்
அதற்கு முதல் பந்துதான் ஸ்டார்க் நோ பால் போட்டு இருந்தார். ஆனால் அந்த நோ பாலை அம்பயர் கவனிக்கவில்லை. அதை அவர் கவனித்து ஒருவேளை ஃபிரி ஹிட் கொடுத்து இருந்தால், அந்த பந்தில் கெயில் தப்பித்து இருப்பார். இதனால் மூன்று முறை தவறான முடிவுகள் கொடுத்த கிறிஸ் கஃபனே பெரிய சர்ச்சைக்கு உள்ளானார்.
மீண்டும் அவர்
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் கிறிஸ் கஃபனே அம்பயராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அதுவும் அதே ஆஸ்திரேலிய அணி விளையாடும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கிறிஸ் கஃபனே அம்பயராக இருக்கிறார்.
பெரிய அதிர்ச்சி
இது தற்போது இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. கிறிஸ் கஃபனே எப்படி மீண்டும் அம்பயராக நிறுத்தப்பட்டார். அவர்தான் பாரபட்சமாக, ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரே என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.