
இந்தியா ஆஸ்திரேலியா
நேற்று முதல்நாள் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் ஆஸ்திரேலியா 50 ஓவர் முடியும் போது அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

தவான்தான் காரணம்
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தவான்தான் காரணம். இவரின் அதிரடிதான் இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. இந்த போட்டியில் தவான் மிகவும் அதிரடியாக ஆடினார். தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

காயம் ஏற்பட்டது
இந்த போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பவுலர் நாதன் நைல் போட்ட பந்து கையில் பட்டு இவரின் இடது கையில் பெருவிரல் காயம் பட்டது. இந்த காயம் காரணமாக அவர் துடிதுடித்து போனார். இதனால் அந்த போட்டி முழுக்க அவர் அவதிப்பட்டார்.

ஆனால் விளையாடினார்
ஆனாலும் இவர் காயத்தை மறைத்துக் கொண்டு பேட்டிங் செய்தார். ஆனால் அன்றைய போட்டியில் தவான் பீல்டிங் களமிறங்கவில்லை. தவானுக்கு பதில் ஜடேஜாதான் பீல்டிங் செய்தார். போட்டியின் இரண்டாம் பாகம் முழுக்க தவான் ஓய்வுதான் எடுத்தார். இதையடுத்து இன்று அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.

விலகல்
இதையடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் தவான் மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். காயம் காரணமாக மருத்துவர்கள் மூன்று வாரம் இவரை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். காயத்தோடு விளையாட கூடாது என்று கூறி உள்ளனர். இது இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியாக மாறி இருக்கிறது.

எத்தனை நாள்
உலகக் கோப்பை போட்டி இன்னும் 4 வாரங்கள் மட்டுமே நடக்கும். அதிலும் மூன்று வாரங்கள் தவான் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் களமிறங்குவது சந்தேகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











