டாஸ் வென்றது
இந்திய அணியின் வெற்றிக்கு கோலி டாஸ் வென்றதும் முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். ஆம், கோலி இந்த போட்டியில் டாஸ் வென்றதன் மூலம் பேட்டிங் தேர்வு செய்ய முடிந்தது. அதுதான் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
பெரிதும் நிதானம்
முதலில் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. முதல் பத்து ஓவர்களில் ரன் ரேட் 4-5 வரை மட்டுமே இருந்தது. அதிகபட்சம் இந்தியா 280 ரன்களை எடுக்கும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் ரோஹித், தவான் இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ரோஹித் சர்மா 57 ரன்னுக்கு அவுட்டான பின், களமிறங்கிய கோலி கொஞ்சம் பதட்டமாக ஆடினார்.
தவான் சென்றார்
தவான் மிகவும் அதிரடியாக ஆடி இன்னொரு பக்கம் செஞ்சுரி போட்டார். ஆனால் தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து அவரும் அவுட்டானார். தவான் 117 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில்தான் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டது. பெவிலியனில் இருந்து தோனி கொடுத்த ஐடியாவின்படி, பேட்டிங் ஆர்டரில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.
என்ன மாற்றம்
நேற்று நான்காவது வீரராக கே எல் ராகுல் அல்லது தோனி இறங்கி இருக்க வேண்டும். ஆனால், நேற்று பாண்டியா 4 வது வீரராக இறக்கப்பட்டார். இதற்கு காரணம், அவர் மிகவும் அதிரடியாக ஆட கூடியவர். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க கூடியவர். ஆனால் தோனி, கே எல் ராகுல் இருவரும் களத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு பின் அதிரடியாக ஆடுவார்கள்.
உடனே வேண்டும்
இதனால் உடனடியாக ரன் குவிக்க வேண்டும் என்று பாண்டியா களமிறக்கப்பட்டார். அது நன்றாகவே வேலை செய்தது என்றுதான் கூற வேண்டும்.வெறும் 27 பந்துகள் பிடித்த பாண்டியா 48 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி வேறு அடக்கம். இந்த 48 ரன்கள்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
தோனி சொன்னார்
பொதுவாக கோலி பேட்டிங் செய்யும் நேரத்தில், களத்திற்கு பேட்ஸ்மேன்களை அனுப்பும் பொறுப்பை தோனிதான் செய்வார். அப்படித்தான் நேற்று பேட்டிங் ஆர்டரை மாற்றி அனுப்பி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதன்பின் களமிறங்கிய தோனி, கே எல் ராகுல் ஆகியோரும் அதிரடியாக ஆடினார்கள்.
வெற்றி பெற்றனர்
தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். களமிறங்கிய எல்லா வீரர்களும் ஏமாற்றாமல் அதிரடியாக அடித்து துவைத்தார்கள். இதனால் இந்திய அணியின் வெற்றி எளிதானது.