விஜய் சங்கர் நீக்கம்
இந்திய அணியில் தொடர்ந்து மோசமாக சொதப்பி வந்த விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு காயம் என்று கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் இன்று மாலை அல்லது இன்று இரவு லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி
நேற்று மதியமே இந்திய அணிக்குள் மயங்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன் செய்யப்பட்ட பயிற்சியின் போதுதான் விஜய் சங்கர் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் நேற்று காலை மீண்டும் பும்ரா போட்ட பந்தில் விஜய் சங்கர் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அதன்பின் தேர்வு வாரியம் நடத்திய அவசர ஆலோசனையில் மயங்க் அகர்வால் பெயர் ஆலோசிக்கப்பட்டது.
என்ன ஆலோசனை
மூன்று வீரர்கள் பெயரை தேர்வு வாரியம் பரிசீலனை செய்துள்ளது. மயங்க் அகர்வால், அம்பதி ராயுடு மற்றும் ரஹானே ஆகியோர் குறித்து ஆலோசித்து இருக்கிறார்கள். 4வது வீரராக களமிறங்க ஏற்கனவே நிறைய பேர் அணியில் இருக்கிறார்கள். இதனால் அம்பதி ராயுடுவை தேவையில்லாமல் அணியில் எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதேபோல் அவருக்கு பவுலிங் போடவும் தெரியாது.
என்ன போட்டி
இதையடுத்து ரஹானே பக்கம் பார்வை சென்றது. அவர் தற்போது லண்டனில்தான் கவுண்டி கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவரை அணிக்குள் எடுக்க பெரிய அளவில் ஆலோசனை நடந்துள்ளது. ஆனால் அவர் கவுண்டி போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அங்கு அவர் மிகவும் பொறுமையாக ஆடுகிறார் என்று புகார் உள்ளது. இதனால் அவர் பெயரை நீக்கிவிட்டு கடைசியில் மயங்க் அகர்வால் பெயரை டிக் அடித்தனர்.
அழைத்தனர்
இதன்பின் மயங்க் அகர்வாலின் பயிற்சியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மயங்க் உடனடியாக லண்டன் அழைக்கப்பட்டார். ஐசிசியும் இவரை இந்திய அணியில் சேர்க்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. சேவாக்கின் நேரடி கண்காணிப்பில்தான் இவர் கிரிக்கெட் பயிற்சிகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருகிறார். 2010 அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவர்தான் அதிக ரன்கள் எடுத்தது.
அப்போதே ஸ்டார்
அப்போது பாகிஸ்தானின் முன்னணி வீரர் பாபர் ஆசம் அதேபோல் ஜோஸ் ஹஸல்வுட் போன்ற வீரர்கள் அண்டர் 19 விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆனால் இவர் அவர்களை எல்லாம் முந்தினார். ஆம் இவர் அண்டர் 19 காலத்திலேயே பெரிய ஸ்டாராக வலம் வந்தார். இவர் ரஞ்சி போட்டிகளில் முச்சதம் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக ஆடி இருக்கிறார்.
மூன்று சதம்
அதேபோல் இவர் நன்றாக பவுலிங்கும் வீச கூடியவர். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய ஏ அணிக்காக இவர் மூன்று சதங்களை விளாசினார். இதுதான் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைக்கு இவர் தேர்வாக முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.