அதிரடி ஆட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தொடங்கியது இந்தியா. தவான் அதிரடியாக 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரோஹித் சர்மா 70 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். கோலி அரைசதம் எடுத்து ஆடி வருகிறார்.
என்ன வழக்கம்
வழக்கப்படி இந்திய அணியில் நான்காவது வீரராக கே எல் ராகுல்தான் களமிறங்க வேண்டும். அவர்தான் அந்த இடத்திற்காக கடந்த ஒரு வருடமாக பயிற்சி எடுத்தார். கே எல் இறங்க முடியாத சூழ்நிலையில் சமயங்களில் சூழ்நிலை கருதி தோனி களமிறங்குவது வழக்கம். இன்றைய போட்டியில் 4வது இடத்தில் தோனி களமிறங்குவார் என்றே கருதப்பட்டது.
இன்னொரு வீரர்
அதே சமயம் 6வது இடத்தில் களமிறங்க கேதார் ஜாதவ் இருக்கிறார். இந்திய அணிக்கு இவர் இக்கட்டான சூழ்நிலையில் உதவி உள்ளதால், அவரும் கூட 4 வது இடத்தில் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவரும் கூட இந்த போட்டியில் 4வது இடத்தில் இறங்கவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒருவரை கோலி நான்காவது இடத்தில் இறக்கி உள்ளார்.
பாண்டியா வந்தார்
அதன்படி பாண்டியா நான்காவது இடத்தில் இறங்கி அசத்தி இருக்கிறார். கே எல் ராகுல், கேதார் ஜாதவ், தோனி மூவரும் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் என்றாலும் தொடக்கத்தில் ரன் எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பாண்டியா அப்படி கிடையாது. இதனால் அவர் தற்போது களமிறங்கி உள்ளார். இந்த ஐடியாவை தோனி கொடுத்தார் என்றும் கூறுகிறார்கள்.
அதிர்ச்சி
கே எல் ராகுல், கேதார் ஜாதவ், தோனி மூவரில் ஒருவர்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவிற்கு பாண்டியா அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேபோல் தற்போது ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று பாண்டியா அதிரடி காட்டி வருகிறார். இந்த திடீர் மாற்றத்தை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.