லண்டன்: இன்றைய இந்தியா-இங்கிலாந்து நடுவேயான கிரிக்கெட் போட்டியில், இரு கேட்ச்சுகள், உலக கோப்பையின் சிறந்த கேட்சுகளாக மாறியுள்ளன.
இங்கிலாந்து பேட் செய்தபோது, ஜேசன் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் சிறப்பாக ஓப்பனிங் செய்து விளாசினர். ஜேசன் ராய், 66 ரன்கள் எடுத்திருந்தபோது, 22வது ஓவரை குல்தீப் யாதவ் போட வந்தார்.
அந்த ஓவரின் முதல் பாலை, இறங்கி வந்து அடித்தார் ராய். அப்போது, லாங் ஆனில் நின்ற ஜடேஜா வேகமாக ஓடி வந்து, பறந்து, விழுந்து கேட்ச் பிடித்தார்.
மிக அசாத்தியமான கேட்சை, மிக எளிதாக பிடித்து ஜடேஜா மாஸ் காட்டினார். கேட்சஸ் வின் தி மேட்சஸ் என்பார்கள். ஜடேஜா பிடித்த அந்த கேட்ச்தான் போட்டியின் போக்கை மாற்றியது. ரன் ரேட் அதன் பிறகு குறைய ஆரம்பித்தது.
இதேபோல, இந்திய பேட்டிங்கின்போது, ரிஷப் பந்த் நல்ல துவக்கம் கொடுத்தார். அவர் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, லியாம் பிளங்கெட் பந்து வீச்சில், லெக் திசையில், கிறிஸ் வோக்ஸ் செமையாக ஒரு கேட்ச் பிடித்தார். பறந்து சென்று பவுண்டரி எல்லைக்கோட்டில் அவர் பிடித்த கேட்ச் இந்த உலக கோப்பையின் சிறந்த கேட்சுகளில் ஒன்று. ஆக மொத்தம், இரு சிறந்த கேட்சுகள் இன்றைய ஒரே போட்டியில் அரங்கேறியுள்ளது.
இந்தியா மோசமாக ஆடினாலும், இந்த சிறந்த கேட்சுகள் மட்டுமே இன்றைய ஆறுதலாக அமைந்தன, நமது ரசிகர்களுக்கு.