தீவு
ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் மேற்கிந்திய தீவுகளில் உள்ள சிறிய பார்படாஸ் தீவில்தான் பிறந்தார். விண்டிஸ் அணியில்தான் விளையாட வேண்டும் என்று இருந்தார். அந்த தீவில் குடியுரிமை கொண்ட இவர், உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
மோசம்
இவர் சிறு வயதில் வறுமையில் கஷ்டப்பட்டதாக ஏற்கனவே கூறி இருக்கிறார். எனக்கு என்று பெரிய அடையாளம் இல்லை. சிறு வயதில் சாப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறேன். என்னை அகதி என்று பலர் கூறி இருக்கிறார்கள். கிரிக்கெட் மட்டும்தான் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. தொடர்ந்து எதாவது ஒரு நாட்டிற்காக விளையாடுவேன் என்று இவர் 18 வயதில் பேட்டி அளித்தார்.
ஆனால் என்ன
இவர் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகளில் உள்ளூர் போட்டிகளில், தீவுகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடி கவனம் ஈர்த்தார். ஆனால் ஏற்கனவே பல குழப்பம் நிலவும் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் எல்லா முக்கிய வீரர்களையும் எப்படி புறக்கணித்து, தனக்கு தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டதோ அதே போல், ஆர்ச்சருக்கும் வாய்ப்பளிக்காமல் பிரச்சனை செய்து வந்தது. அதனால் இவரும் அங்கு புறக்கணிக்கப்பட்டார்.
அனுமதி இல்லை
அப்போது ஆர்ச்சர் மிக உச்சக்கட்ட பார்மில் இருந்தார். ஆனால் அவருக்கு மேற்கிந்திய தீவுகளின் அண்டர் 19 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் அப்போது அண்டர் 19 கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக விளையாடினாலும் பல முக்கிய கண்கள் ஆர்ச்சரர் எங்கே இருக்கிறார் என்றுதான் தேடியது. ஆனால் அவருக்கு அந்த தொடரில் எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கோபம் வந்தது
ஒரு பக்கம் வறுமை.. ஒரு பக்கம் கிண்டல் கேலி.. இன்னொரு பக்கம் புறக்கணிப்பு அவரை துரத்தியது. வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஆர்ச்சரர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார். என் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் எனக்கென்ன வேலை என்று உடனே இங்கிலாந்து சென்று விளையாட முடிவெடுத்தார். அதன்பின் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாட வேண்டும்.
என்ன விதி
விதிப்படி பார்த்தால் ஆர்ச்சர் 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது. அவருக்காக விதியை மாற்றுவதா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால்.. ஆனால் அந்த கருப்பின இளைஞனுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் விதியையே மாற்றியது. ஆம் 7 வருடம் ஆட வேண்டும் என்ற விதியை மாற்றியது. எல்லோரும் புறக்கணித்த அவரை வாரி இங்கிலாந்து அணி அணைத்துக் கொண்டது.
என்ன ஐபிஎல்
2018 ஐபிஎல் போட்டிதான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஒரே வருடத்தில் தற்போது இவர் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 லீக்கிலும் விளையாடி வந்தவர் கவனம் ஈர்த்தார். 2018 ஐபிஎல் போட்டியில் அவருக்கு கடைசியில்தான் வாய்ப்பு வந்தது.
எப்படி ஆடினார்
அதிலும் கூட ராஜஸ்தான் அணி 7 கோடி கொடுத்து எடுத்து இருந்தாலும் தொடக்கத்தில் அவரை வெறுமனே உட்கார வைத்துதான் இருந்தனர். ஆனால் அவருக்கு அவரின் பலம் தெரிந்து இருந்தது. மும்பைக்கு எதிராகத்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் அப்படியே சரியாக பயன்படுத்திக் கொண்டார்,. 4 ஓவர் போட்டு மொத்தம் 3 விக்கெட் எடுத்தார் இந்த பிளாக் பந்தர். இதில் பாண்டியா சகோதரர்கள், மிட்சல் விக்கெட் அடக்கம்.
செம
அதன்பின் அவரின் வாழ்க்கை மாறியது. உலகக் கோப்பையிலும் வாய்ப்பு கிட்டியது. இவர்தான் நேற்று இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் ஓவரை வீசினார். 16 ரன்கள் தேவை என்ற நிலையில் 15 ரன்கள் கொடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். தன்னுடைய வறுமை, பிரச்சனைகள், புறக்கணிப்புகள் அனைத்திற்கும் அவர் அந்த சூப்பர் ஓவரில் பதில் சொன்னார்.. உண்மையில் உலகக் கோப்பையில் வீசப்பட்ட ''சூப்பர் ஓவர்'' இதுவாகத்தான் இருக்கும்!