தவான் காயம்
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் இவரை அணியில் இருந்து விலக்கி இருக்கிறார்கள். இதனால் தற்போது இந்திய அணியின் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கி வருகிறார்.
எப்படி ஆடுகிறார்
முறைப்படி கே எல் ராகுல் தொடக்க வீரராகத்தான் பயிற்சி எடுத்தார். அதனால் அவர் அந்த இடத்தில் நன்றாக ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக சென்ற போட்டியில் அவர் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் இந்த போட்டியில் நிலைமை அப்படி இல்லை.
மிக மோசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் 1 ரன்னில் அவுட்டானார். அதன்பின் கே எல் ராகுல் பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி ஆடவில்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர்கள் போட்ட பந்துகளில் மோசமாக திணறினார். இவரின் ஆட்டத்தை பார்க்கவே எப்போ பாஸ் அவுட்டாவீங்க என்று கேட்கலாம் போலவே இருந்தது.
அவுட்டானார்
ஆனால் நாம் கேட்கும் முன்பே கே லே ராகுல் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தார். எளிதாக வந்த நபி பந்தை அவர் சாதாரணமாக அடித்து இருந்தால் கூட பவுண்டரி சென்று இருக்கும். ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல், ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து, ராகுல் தேவையில்லாமல் அவுட்டானார்.
கண்டனம்
இந்த நிலையில் ராகுலுக்கு எதிராக பலர் இணையத்தில் விமர்சனம் வைத்து வருகிறார்கள். ராகுல் ஏன் இப்படி ஆடுகிறார். அவர் ஏன் ஸ்பின் பவுலிங்கில் இப்படி திணறுகிறார். தவான் இல்லாத ஓப்பனிங் கஷ்டம்தான். இந்திய அணியின் பலம் இனிதான் தெரிய போகிறது என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.