ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வென்றது
நேற்று முதல்நாள் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர் முடியும் போது அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
என்ன அதிரடி
இந்த போட்டியில் தவான் மிகவும் அதிரடியாக ஆடினார். தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன காயம்
ஆஸ்திரேலிய பவுலர் நாதன் நைல் போட்ட பந்து கையில் பட்டு இவரின் இடது கையில் பெருவிரல் காயம் பட்டது. இதனால் அந்த விரல் வீங்கியது. இதே வீக்கத்தோடுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் தொடர்ந்து ஆடினார். வீக்கம் அவருக்கு இன்னும் வடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மோசம்
இதனால் அன்றைய போட்டியில் தவான் பீல்டிங் களமிறங்கவில்லை. தவானுக்கு பதில் ஜடேஜாதான் பீல்டிங் செய்தார். போட்டியின் இரண்டாம் பாகம் முழுக்க தவான் ஓய்வுதான் எடுத்தார். இதுதான் தற்போது கோலிக்கு வருத்தத்தை தந்து இருக்கிறது. அடுத்து நடக்கும் உலகக் கோப்பையில் தவான் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்போது போட்டி
இதற்காக இன்று தவான் விரலை ஸ்கேன் எடுக்க இருக்கிறார்கள். இன்று மாலை இது தொடர்பான முடிவுகள் வெளியான பின்பே தவான் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது தெரிய வரும். நாளை மறுநாள் இந்தியா தனது அடுத்த போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.