ஆப்கான் வீரர்
ரஷீத் கான் ஆப்கான் அணியின் ஆல்ரவுண்டர். இவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது. போர் பூமியான ஆப்கானின் வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர்தான் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் ஹீரோ. இன்றைய போட்டியில் இவர் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது.
இந்திய அணி
ஐபிஎல் போட்டி காரணமாக தற்போது அனைத்து அணியை சேர்ந்த வீரர்களும் இந்திய அணியின் வீரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். வெவ்வேறு அணி வீரர்கள் ஒரே அணியில் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது ரஷீத் கானும் இந்திய அணி வீரர்களுக்கு நல்ல நண்பராக இருக்கிறார். இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் இந்திய வீரர்களின் நுணுக்கங்கள் இவருக்கு தெரியும்.
சிறப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். பவுலிங்கில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பொறி பறக்க விடுகிறார். ஐபிஎல் போட்டியில் கடந்த இரண்டு வருடமாக இவர் ஸ்டார் பவுலராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். முக்கியமாக 2018 ஐபிஎல்லில் இவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.
திணறல்
ஐபிஎல் போட்டியில் பெரும்பாலும் ரஷீத் கான் பந்தில்தான் வீரர்கள் அதிகம் திணறினார்கள். முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன்கள் ரஷீத் கான் பந்தில்தான் அதிகம் கஷ்டப்பட்டனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவருமே ரஷீத் கான் பந்தில் பெரிய அளவில் ஆட முடியாமல் திணறினார்கள்.
பெரிய கோபம்
ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இவர் தன்னுடைய திருப்பத்திற்காக காத்து இருக்கிறார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் 9 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 110 ரன்கள் கொடுத்தார். இந்த மோசமான பவுலிங் காரணமாக இவர் வருத்தத்தில் உள்ளார். இதற்கு சரியான பதிலடியை அவர் இன்றைய போட்டியில் வழங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்திய வீரர்கள் வேறு பயிற்சி இல்லாமல் இந்த போட்டியில் களமிறங்குவதால் ரஷீத் கான் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.