என்ன இலக்கு
இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கை இந்திய அணி பொறுமையாக ஆடியது. ஆனால் இந்திய அணியால் எவ்வளவு முயன்றும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
காரணம் என்ன
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் மிக மோசமாக இந்த போட்டியிலும் ஆடினார். களத்தில் இதற்கு முன்பு நின்றதே இல்லை என்பது போல மிக மிக மோசமாக அவர் ஆடினார். அதோடு அவர் டக் அவுட்டாகி வெளியே சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோசமான இணை
கோலியும், ரோஹித் சர்மாவும் இணைந்து ஆடினாலும் அவர்கள் விக்கெட் விழ கூடாது என்று மிக மிக பொறுமையாக ஆடினார்கள். 10 ஓவருக்கு இந்திய அணி வெறும் 30 ரன்கள் கூட எடுக்கவில்லை என்பதுதான் இதில் மோசமான விஷயம். அந்த அளவிற்கு இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து சரிந்தது. கோலியும், ரோஹித்தும் பெரிய அளவில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்யவில்லை.
என்ன பிரச்சனை
இதனால் ரன் ரேட் குறைந்தது. இது கடைசியில் களமிறங்கும் வீரர்களுக்கு பிரச்சனையாக முடிந்தது. கடைசி 20 ஓவரில் 180 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பண்ட், பாண்டியா இருவரும் நன்றாக ஆடினாலும் அவர்கள் நீண்ட நேரம் ஆட கூடிய வீரர்கள் கிடையாது. ஒரு ஓவருக்கு 10+ ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் தோனியால் இங்கிலாந்து பவுலர்களையும் பெரிய அளவில் சமாளிக்க முடியவில்லை.
முதல் 10
இந்த அணி குறைந்தபட்சம் முதல் 10 ஓவர்களில் 70 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். தொடக்க வீரர்கள் இந்திய அணியில் அதிரடியாக ஆடினால் மட்டுமே இந்திய அணியில் பின் இறங்கும் வீரர்கள் பதற்றம் இல்லாமல் ஆட முடியும். அதேபோல் ரோஹித் சர்மா 90-100 ரன்களை கடக்க அதிக பந்துகளை வேஸ்ட் செய்தார், அங்கு கொஞ்சம் அவர் சுயநலமாக செயல்பட்டார் என்றும் புகார் இருக்கிறது.
தவறு
கோலி சரியான ஷாட்களை ஆடவில்லை. பண்ட் வாய்ப்பு கிடைத்தும் கூட டி 20 போல விளையாட்டுதனமாக ஆடினார், தோனி வேண்டும் என்றே மெதுவாக ஆடுவது போல இருக்கிறது என்று புகார்கள் நிறைய வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று பாண்டியா மட்டுமே கொஞ்ச ரன் ரேட் உணர்ந்து பொறுப்பாக ஆடினார். ஆக மொத்தம் இந்திய அணியின் தோல்விக்கு ஒருவர் மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது.. மொத்தமாக ஒரு அணியாக இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது.