நேற்று களத்தில் என்ன நடந்தது? ஏன் தோனி அப்படி நடந்து கொண்டார்? பதில் தெரியாத ஒரு கேள்வி!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி ஆடிய விதம் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியை தழுவியது. இதனால் செமி பைனலுக்கு செல்ல வேண்டிய இந்தியா அடுத்த போட்டி வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. ஆனால் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தோனி என்ன
எல்லா போட்டியை போலவும் இந்த போட்டியிலும் தோனி மிகவும் மெதுவாகவே ஆடினார். தன்னுடைய ஸ்டிரைக் ரேட்டுக்கு பங்கம் வராமல் விளையாடினார். கடந்த ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் தோனி இப்படி விளையாடித்தான் சர்ச்சையில் சிக்கினார். நேற்றும் அவர் இப்படித்தான் ஆடினார்.

என்ன மோசம்
முக்கியமாக இந்திய அணிக்கு கடைசி 10 ஓவரில் 90 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதை கண்டிப்பாக தோனி பாண்டியா ஜோடி நினைத்து இருந்தால் எடுத்து இருக்க முடியும். ஆனால் தோனி நேற்று தொடர்ந்து சிங்கிள் அடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும் என்று காத்திருப்பது போல கடைசி வரை அவரின் அதிரடிக்காக காத்திருக்க வைத்தார்.

ஏன் அப்படி
இன்னொரு பக்கம் ஆடிய கேதார் ஜாதவும் மாறி மாறி சிங்கிள் வைத்துக் கொண்டே இருந்தார். ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் போதும் என்றே இரண்டு வீரர்களும் மாறி மாறி ஆடிகொண்டு இருந்தனர். ஆனால் இவர்கள் ஏன் இப்படி டொக் வைத்து ஆடினார்கள் என்பதற்கான பதில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் தேவை என்ற நிலை வந்த போது கூட ஏன் பொறுமையாக ஆடினார்கள்.

கேள்வி
அட வெற்றிபெற வேண்டும் என்று கூட ஆசை பட வேண்டாம். வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்று கொஞ்சம் போராட்ட குணமாவது இருக்கலாம் அல்லவா. ஆனால் நேற்று தோனிக்கு அது கொஞ்சம் கூட இல்லை. அவர் ஏன் இப்படி ''எனக்கு என்ன வந்தது'' என்ற மனோபாவத்தில் ஆடினார். ஏன் அவர் கொஞ்சம் கூட வெற்றி மீது ஆசை கொண்டு ஆடவில்லை என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications