
என்ன மாற்றம்
இந்திய அணி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரே ஸ்பின் ஜோடியைத்தான் கிரிக்கெட் தொடர் முழுக்க பயன்படுத்தி வந்தது. குல்தீப் - சாஹல் இருவரும்தான் இந்திய அணியின் ஸ்பின் ஜோடியாக இருந்தனர். இவர்கள் மிக சிறப்பாக இந்திய அணிக்காக கடந்த ஒரு வருடமாக பந்து வீசி வந்தனர். குல்தீப் சென்ற வருடம் ஹாட் டிரிக் விக்கெட் எல்லாம் கூட எடுத்தார்.

எடுபடவில்லை
ஆனால் இந்த முறை இந்திய அணியில் இந்த ஸ்பின் ஜோடி எடுபடவில்லை. உலகக் கோப்பை முழுக்க குல்தீப் - சாஹல் ஜோடி பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை. சாஹல் ஆங்காங்கே ஒன்று இரண்டு விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். ஆனால் குல்தீப் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இதனால் இந்திய அணி பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

நீக்கினார்கள்
குல்தீப், சாஹல் இருவரும் அணிக்குள் வந்த பின்தான் மொத்தமாக அணியில் இருந்து அஸ்வின், ஜடேஜா இரண்டு பேரும் நீக்கப்பட்டனர். இவர்கள் நீக்கப்பட்டதால் இந்திய அணியின் டெய்ல் பேட்டிங் பலமும் மோசமாக வலுவிழந்தது. இவர்களுக்கு இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது குல்தீப் - சாஹல் ஜோடியின் தோல்வி வேறு கோலியை யோசிக்க வைத்துள்ளது.

அடுத்த போட்டி
இதனால் அடுத்த செமி பைனல் போட்டியில் இந்திய அணியில் எப்படியும் குல்தீப் இடம்பெற மாட்டார் என்று கூறுகிறார்கள். குல்தீப்- சாஹல் ஜோடிக்கு பதிலாக இந்திய அணியில் சாஹல் - ஜடேஜா ஜோடி பயன்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள். ஜடேஜா அணிக்குள் வந்தால் அது பெரிய பேட்டிங் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பில்லை
இதனால் செமி பைனல் மற்றும் பைனல் (தேர்வானால்) இரண்டிலும் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் குல்தீப்- சாஹல் ஜோடி ஒன்றாக இறங்க வாய்ப்பே இல்லை என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் உலகக் கோப்பைக்கு பின் அணிக்குள் அஸ்வின் சேர்வது எல்லாம் நடக்காத காரியம் என்றும் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











