என்ன மாற்றம்
இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு போட்டிகளாக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷமி அணியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் கடந்த நான்கு போட்டியிலும் முக்கியமான வீரராக, முக்கியமான கேம் சேஞ்சராக இருந்தவர் முகமது ஷமிதான்.
நல்ல பலம்
புவனேஷ்வர் குமார் காயம் அடைந்த பாகிஸ்தான் போட்டிக்கு பின் ஷமி அணிக்குள் வந்தார். இவர் அணிக்குள் வந்த பின் இந்த அணியின் பவுலிங் அதிக பலம் அடைந்தது. ஆனால் இவர் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட் அடக்கம். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார்.
ஆனால் இல்லை
ஆனால் கடைசியாக நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் 1 விக்கெட்தான் எடுத்தார். அதேபோல் அதிகமாக ரன்களை கொடுத்தார். இதனால் தற்போது இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்திய அணி இரண்டு ஸ்பீட் பவுலர்களுடன் மட்டுமே களமிறங்கும் என்பதால் இவருக்கு அணியில் இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.
ஏன் இப்படி
ஷமி இந்த வருடம் முழுக்க சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனாலும் ஷமி எப்போதும் இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வழக்கம். அது இன்றும் நடந்து இருக்கிறது. நன்றாக விக்கெட் எடுத்து வந்தாலும் அவர் இப்படி புறக்கணிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இவரை ஏன் இன்று கோலி நீக்கினார் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.