வெற்றி
நேற்று நடந்த இந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடியும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆனால் என்ன
ஆனால் இந்த போட்டியில் களமிறங்கிய நேரத்தில் இருந்தே கோலி பெரிய அளவில் பதற்றத்துடன் இருந்தார். ரோஹித் சர்மா அவுட்டான பின் கோலி களமிறங்கினார். அதன்பின் முதல் 50 ரன்கள் எடுக்கும் வரை கோலி பதற்றமாகவே இருந்தார். 30 ரன்களுக்குள் இவர் இரண்டு முறை அவுட்டாக பார்த்தார். பதற்றம் காரணமாக அவர் அவுட்டாக பார்த்தார்.
ஏன் இப்படி
இதை ரசிகர்களே சுட்டிக்காட்டி இருந்தனர். நேற்று கோலிக்கு இரண்டு விதமான பதற்றம் இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இதனால் அதிரடியாக ஆட வேண்டும். அதே சமயம், ரோஹித் சர்மாவை விட அதிக ரன்கள் எடுக்க வேண்டும். ஆம் தற்போது ரோஹித் சர்மாவிற்கும், கோலிக்கும் இடையில் ஒரு போட்டி நிலவி வருகிறது.
போட்டி
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐயில் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். சிலர் கோலிதான் தொடர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதனால்தான் தற்போது இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் வென்றால்தான் கோலி இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார். இல்லையென்றால் ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்பார் என்கிறார்கள்.
வேறு அழுத்தம்
அதேபோல் முதலில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த போட்டியில் கோலி மோசமாக விளையாடினார். அதில் அவர் சரியாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் அதே போட்டியில் ரோஹித் செஞ்சுரி போட்டார். நேற்றைய போட்டியில் இருவருமே நன்றாக ஆடினார்கள். இதனால் தற்போது இவர்களுக்கு இடையில் யார் சிறந்த வீரர் என்ற போட்டியும் இருக்கிறது.
முதல் இடம்
தற்போது ஐசிசி ஒருநாள் தொடரின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார். நம்பர் 2 இடத்தில் ரோஹித் இருக்கிறார். இந்த தொடர் போட்டி, அழுத்தம் என்று பல்வேறு விஷயங்கள் காரணமாகத்தான் நேற்று கோலி களத்தில் அதிகம் டென்ஷன் ஆனார் என்கிறார்கள். இது எப்போது வேண்டுமானாலும் பிரச்சனையாக வெடிக்கலாம் என்கிறார்கள்.