தோனி ஓய்வு
இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு ஒன்றும் அத்தனை மகிழ்ச்சிகரமான தொடர் கிடையாது. இந்த தொடர் முழுக்க அவர் பெரிய அளவில் இந்திய அணிக்காக அதிரடியாக ஆடவில்லை. எல்லா போட்டியிலும் அவரின் மெதுவான பேட்டிங் பெரிய கேள்விக்குறியானது. பலர் அவரின் பேட்டிங் குறித்து விமர்சனம் செய்தனர்.
பெரிய சர்ச்சை
சச்சின், சேவாக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கூட தோனியின் பேட்டிங்கை கிண்டல் செய்தனர். அவர் இன்னும் பொறுப்பாக ஆட வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். தோனி இப்படி மூத்த வீரராக இருந்து கொண்டு மெதுவாக ஆட கூடாது என்று கூறினார்கள்.
ஓய்வு
இதையடுத்து தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் கடைசி போட்டியோடு அவர் ஓய்வு பெறுவார் என்று நிறைய செய்திகள் வந்தது. தோனி தனது ஓய்வை விரைவில் அறிவிப்பார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் நிறைய வந்தது. தற்போது ஏபிபி செய்தி சேனலின் நிருபருக்கு அளித்த பேட்டியில் தோனி இதற்கு பதில் அளித்துள்ளார்.
என்ன பதில்
தோனி அளித்த பேட்டியில் ''இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை. ஓய்வு பெறுவதை குறித்து நான் இப்போது சிந்திக்கவே இல்லை. ஆனால் சிலர் இன்று நடக்கும் இலங்கை போட்டியோடு நான் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று தெரிவித்துள்ளார்.