சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இரு அணி வீரர்களும் சென்னையில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களும் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் தற்போது முதல் சில ஓவர்களையும் பேட்டிங்கில் நடுவரிசையில் அதிரடியாக விளையாடும் வீரராக விளங்குபவர் மார்கஸ் ஸ்டோனிஸ். இந்தியாவுக்கு எதிராக பல வில்லங்கமான ஆட்டங்களை ஆடி இந்திய ரசிகர்களுக்கு வில்லனாகவே இருந்திருக்கிறார். இந்த நிலையில் மார்கஸ் ஸ்டோனிசுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகிகள் மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் முதல் போட்டியில் அவர் விளையாடுவது என்பது சந்தேகமாகவே இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து பேசிய பயிற்சியாளர் மெக் டொனால்ட் உலகக்கோப்பை என்பது நீண்ட நெடிய தொடர் என்பதால் இதில் மார்க்கஸ் ஸ்டோனிசுக்கு தேவையில்லாமல் நெருக்கடி கொடுத்து அவருடைய காயத்தை அதிகப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். எனினும் இந்தியா போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர் பங்கேற்பது தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், முக்கிய ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிசும் விலகி விட்டால் அது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.