அகமதாபாத் : 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட கவுன்டவுன் அகமதாபாத்தில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சியை வித்தியாசமாக மேற்கொள்ள ஐசிசியும், பிசிசிஐயும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி, உலககோப்யை தற்போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திற்கு மேல் நிலை கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் பலூன் மூலம் உலக கோப்பை அனுப்பபட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடிக்கு வளி மண்டலத்தில் தற்போது உலக கோப்பை இருக்கிறது. இதனை 4K கேமிரா மூலம் காட்சிகள் பதிவு செய்ய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்போது மைனஸ் 65 டிகிரி கடுங்குளிரில் உலககோப்பை இருக்கிறது.
இது , செவ்வாய்கிழமை மாலை அகமதாபாத்தில் வந்து இறங்கும். இதன் பிறகு உலக கோப்பை தொடருக்கான கவுண்டவுன் தொடங்கும். இதில் உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட உள்ளது. அதன் பிறகு, உலக கோப்பை சுமார் 18 நாடுகளுக்கு , 40க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
சுமார் 100 நாட்கள் செல்லும் உலக கோப்பை, தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா வந்து சேரும். இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்ட டிவிட்டில், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கு இது பிரம்மாண்ட தொடக்கமாக அமைந்துள்ளது. விண்வெளிக்கு அனுப்படும் முதல் விளையாட்டு தொடர் கோப்பை இது தான் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.
இதனிடையே, உலக கோப்பை தொடர் தொடங்கும் முன்பே இதனை காற்றில் இந்தியா பறக்கவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர். இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு கடந்த 10 ஆண்டுகளாக காற்றில் பறப்பதை தான் ஐசிசியும், பிசிசிஐயும் இணைந்து பிரதபலிப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.