மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஐந்தாம் தேதி இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் இந்த தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இந்த உலகக் கோப்பையில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அது யார் என்று தற்போது பார்க்கலாம். ஸ்டெயின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகமது சிராஜ். சிராஜ் அண்மையில் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் தன்னுடைய வித்தியாசமான வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் சிராஜின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஸ்டெயினின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. ரபாடா தன்னுடைய வேகத்தால் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை நிலை குலைய வைப்பார். மேலும் தென்னாப்பிரிக்காவின் மிக முக்கிய வீரராக ரபாடா விளங்குகிறார். மேலும் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் ரபாடா தனது முத்திரையை பதிப்பார்.
எனவே இந்த தொடரில் அவருடைய செயல்பாடு கவனிக்கப்படும்.
ஸ்டெயின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் வேகபந்துவீச்சால் ஷாகின் அப்ரிடி. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சாஹின் அப்ரிடி, ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் பந்து வீசும் போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். தன்னுடைய அதிவேக இடதுகை பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பதில் ஷாகின் அப்ரிடி வல்லவர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராக ஷாகின் ஆப்ரிடி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தான அணி வெல்ல முடியும்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட். இடது கை வேகப்பந்து வீச்சில் கலக்கக்கூடிய நபர் தான் பவுல்ட். நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பந்துவீச்சில் பவுல்ட் விலங்குகிறார் .பவுல்ட் சமீப காலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் இந்த உலகக் கோப்பையில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் மார்க் வுட். வுட் தன்னுடைய வேகத்தால் ரன்களை கட்டுப்படுத்தக்கூடியதில் வல்லவர். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் யாக்கர் லெங்த் பந்துவீச்சை வீசி அசத்துவார். ஸ்டெயினின் இந்த பட்டியலில் இந்தியாவின் பும்ரா இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.